தேசிய மாணவர் படையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை - பிரதமர் மோடி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவின் உச்சகட்டமாக ஜனவரி 28ம் தேதி தேசிய மாணவர் படையினரின் சாகஸ நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்றது.  

இதில் பங்கேற்ற படை பிரிவினர் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ பீரங்கிகள் அணிவகுப்பு, பாரசூட் சாகசங்கள் இடம் பெற்றன. பிரதமர் மோடி அவற்றை பார்வையிட்டார்.
முன்னதாக படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். சிறப்பாக செயல்பட்ட குழுவினருக்கு பதக்கங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கி கௌரவித்தார்.

தேசிய மாணவர் படையினர் அணியும் தொப்பியை தலையில் அணிந்த படி காட்சியளித்த பிரதமர் மோடி நிகழ்ச்சியின்போது பேசியதாவது:

நானும் என்.சி.சி.யின் தீவிர உறுப்பினராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன். என்.சி.சி.யை வலுப்படுத்த எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பேரணியில் ஏராளமான பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதுதான் இந்தியா இன்று கண்டுள்ள மாற்றம். கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லைப் பகுதி பணியில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய என்.சி.சி.வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உங்களின் உறுதியுடனும் ஆதரவுடனும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற முடியும். போதைப் பழக்கம் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கிறது, இதற்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Previous Next

نموذج الاتصال