ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.  ஆனால், கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான முட்டுக்கட்டை நீங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது:-

21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 4ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ம்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி ஆகும். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Next

نموذج الاتصال